கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் .

X
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி வார இறுதி நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மதியத்திற்கு மேல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. ஒருபுறம் கோடை வெயில் வாட்டி வதைத்தாலும், மறுபுறம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, சிறுவர் பூங்கா, மான்பூங்கா, சேர்வரயன் கோவில், பக்கோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம் போன்ற பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நண்பர்கள், குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேசமயம், சிலர் இயற்கை கொஞ்சும் அழகை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தும், குடும்பத்துடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி, ஸ்வீட் கான் போன்ற தின்பண்டங்களின் வியாபாரம் சூடு பிடித்தது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Next Story

