உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி பிரதாபராமபுரம் கிராம மக்கள்

கடற்கரையில் கையில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம்
கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் ஜனவரி 5 -ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மறு தேர்தலுக்கான அறிவிப்பு இதுவரை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இதனால் தனி அலுவலர்கள் மூலமாக, ஊராட்சி நிர்வாகம் செயல்பட உள்ள சூழ்நிலை உள்ளது. இதனால், மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தேர்தல் ஆணையம் உடனடியாக, கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென தன்னாட்சி அமைப்புகள் சார்பில், பல்வேறு கவன ஈர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிரதாபராமபுரம் ஊராட்சி மக்களோடு இணைந்து ஊராட்சி தேர்தலின் அவசியம் குறித்தும், உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தி, கடற்கரை பகுதியில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.எஸ்.சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவா கோரிக்கைகளை விளக்கி பேசினார். கையில் பதாகைகளை ஏந்தியபடி, கிராம மக்கள், ஊராட்சி தேர்தல் வேண்டும், உழைக்கும் மக்கள் அதிகாரத்தில் அமர ஊராட்சி தேர்தல் வேண்டும், 50 சதவீத பெண்கள் அதிகாரத்தில் அமர ஊராட்சி தேர்தல் வேண்டும், சமூக நீதி நிலைத்திட ஊராட்சி தேர்தல் வேண்டும், கிராமசபை நிர்வாகம் நிலைத்திட ஊராட்சி தேர்தல் வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டிக்கிறோம்,பஞ்சாயத்து தேர்தலை தள்ளி போடாதே, ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் ஊராட்சி தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில், தன்னாட்சி அமைப்பைச் சேர்ந்த சித்தார்த், வினோத்குமார், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story