நீர்மட்டம் சரிந்தது

நீர்மட்டம் சரிந்தது
X
2,550 கன அடியாக நீர் திறப்பு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86 அடியாக சரிந்தது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடிகொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.68 அடியாக குறைந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 152 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதுவரை நிறுத்தப்பட்டிருந்த கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இன்று முதல் மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு 1,500 கன அடி நீரும், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 150 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 2,550 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 37.12 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 30.45 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 18.70 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story