மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை கேட்டு பட்டா
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த 26 பேருக்கு, முதல்வர் வருகையின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தவெக சார்பில் மனு அளித்தனர். இந்நிலையில், தவெக சார்பில் மனு அளித்ததை கண்டித்து, திமுகவினர் நேற்று முன்தினம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பேட்டி அளித்த பெண் உட்பட 4 பேரை மானபங்கபடுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, திமுக பிரமுகர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், கருங்கண்ணியை சேர்ந்த வெண்மணி, பரமேஸ்வரி, சித்ரா, ராகிணி ஆகிய 4 பேரும் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து, தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில், கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் இந்த விவகாரம் குறித்து, நேரில் விசாரணை செய்ய கீழையூர் போலீசார், மருத்துவமனைக்கு வந்தனர். ஏற்கனவே புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story




