சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்க உள்ள அடையள அட்டை பெறுவதற்கு பட்டா நிலம் வைத்திருக்க வேண்டுமென்ற அறிவிப்பு நடைமுறையில் உள்ளது. நாகை மாவட்டத்தை பொருத்தவரை ஏறக்குறைய சுமார் 60 சதவீதத்திற்கு மேல் சாகுபடி நிலம், கோயில் மற்றும் மடத்திற்கு சொந்தமான பட்டா நிலமாக உள்ளது. இதனை விவசாயிகள் குத்தகை தொகை செலுத்தி பல ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் சொந்த பட்டா உள்ள விவசாயிகளுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கும் பட்சத்தில் மீதம் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கான சலுகையை பெற முடியாத நிலை எதிர் காலத்தில் ஏற்படும். அதனால் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும், அடையாள அட்டை வழங்க வேண்டும். பட்டா நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் அடையாள அட்டை என்று நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன் சிபிஐ சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றக் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும், எட்டுக்குடி ஊராட்சிக்குட்பட்ட வல்லம் கிராமத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் மூலம் அளந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம்.ஹாஜா அலாவுதீன், மாவட்ட துணை செயலாளர் கே.ராமலிங்கம், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீ.எஸ்.மாசேத்துங், சிபிஐ ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் கே.ஜெயராமன், ஏஐடியுசி லோடுமேன் சங்க தலைவர் எஸ்.கண்ணதாசன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.தினேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story



