நெகிழி இல்லாத கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி

பிரமாண்ட மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட போட்டி
நெகிழி இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று நாகையில் மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அக்கரைப்பேட்டை கிராமம் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக, 7 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் சளைக்காமல் நீண்ட தூரம் உற்சாகத்துடன் ஓடி வந்தனர். போட்டியில் பங்கேற்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பொதுமக்கள் கைதட்டி அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்தினர். மாரத்தான் போட்டியில் முதல் 11 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், ஊக்க தொகையுடன் கூடிய பரிசு மற்றும் சான்றிதழ், கேடயங்களை அக்கரைப்பேட்டை கிராமத்தினர் வழங்கி பாராட்டினர்‌.
Next Story