அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

X
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் இரண்டாவதாக உள்ள தமிழ்நாட்டில் ஏன் இன்னும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. இதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசுத் துறைகளில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றன. இதைக் கைவிட்டு நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும். அரசு ஊழியர்களை அடிமையாக வைக்கும் முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்தைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்களுக்கு ஊதியம் நான்கைந்து மாதங்கள் நிலுவையில் இருப்பதை உடனே வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்குத் தனித் துறையை உருவாக்க வேண்டும். நியாய விலை கடைகளில் தரமான, சரியான எடையில் பொருட்களைப் பொட்டலங்களாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணி நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவை வெளிப்படைத் தன்மையாக நடைபெற வேண்டும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கை முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசிடமிருந்து அண்மையில் வந்த உத்தரவில் அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் உரிமைக்கு எதிரான இந்த உத்தரவை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 13 ஆம் தேதி தமிழகத்தில் 22 மண்டலங்களில், மாவட்டத் தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் ஊழியர்கள் போராட்டம் தொடரும் என்றார் பாலசுப்பிரமணியன். அப்போது மாநிலத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம் உடனிருந்தார்.
Next Story

