சவுரிராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில், சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டு, 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு மாசி மகப் பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகின்ற 18-ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி 4-வது நாள் நேற்று முன்தினம் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது. இதில், சவுரிராஜப் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார். இதில், செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் மணிகண்டன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் 11 -ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 13-ம் தேதி காலை சவுரிராஜப் பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து, அங்குள்ள வரதராஜ பெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப் பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களா தெப்பம் என்ற தெப்பத் திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
Next Story

