ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி

X
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப்படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காக கால அளவு 2 மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

