தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

X
Komarapalayam King 24x7 |11 March 2025 3:42 PM ISTகுமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் நினைவுக்கல் வைக்கும் சம்பவம் சம்பந்தமாக தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் நினைவுக்கல் நட வந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் உருவானதையடுத்து, தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் உள்ளிட்ட, நில உரிமையாளரின் சமுதாய மக்கள் பலரும் திரண்டதால், மோதல் சூழல் ஏற்பட்டது. குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து சமரசம் செய்து வைத்தனர். இது சம்பந்தமாக நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எவ்வித முடிவும் எட்டப்படாமல், வெள்ளிக்கிழமைக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
