குண்டம் விழா

X

கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தி நேர்த்திக்கடன்
ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் பிரசித்தி பெற்ற கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுந்தோறும் மாசி மாதம் குண்டம் மற்றும் பொங்கல் விழா நடப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான குண்டம் மற்றும் பொங்கல் விழா, கடந்த பிப்.25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 3ம் தேதி கொடியேற்றுதலும், 9ம் தேதி பாலபிஷேகமும், 10ம் அக்னி கபாலம் நகர்வலமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு (11ம் தேதி) குண்டம் பற்ற வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியின் முக்கிய விழாவான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். தொடர்ந்து, கங்கனம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரகணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடை செலுத்தினர். இதில், கோவை, சேலம், கரூர், திருப்பூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், கடந்த 2 நாட்களாக காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து, நேற்று இரவு பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலம் நடைபெற்றது. இன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். குண்டம் விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Next Story