டாஸ்மாக் ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
X
டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை, தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி உள்ளதாக மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த முகாந்திரமும் இல்லாமல் டாஸ்மாக்கில் ஊழல் என குற்றம் சாட்டப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். ரூ.1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார். அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது.  டெண்டர் முறையில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படுகிறது, எந்த முறைகேடும் இல்லை. டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யப்பட்டு உள்ளது என்றார். 4 ஆண்டு காலங்களாக டாஸ்மாக் நிறுவனத்தின் பாரத் டெண்டர்கள் முதல் அனைத்து டெண்டர்களுமே ஆன்லைன் முறையில் எடுக்கப்படுகிறது. பொத்தாம் பொதுவாக ஆயிரம் கோடி என சொல்கிறார்கள். தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டை எந்த ஆவணத்தின் அடிப்படையில் முன் வைக்கிறார்கள் என்றார். மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துச் சென்றிருப்பதால் மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. இ.டி. சோதனையை சட்டரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்ளும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை என்கிறார்கள் ஆனால் எந்த முதல் தகவல் அறிக்கை என்பதை சொல்லவே இல்லை என்றார்.
Next Story