காஞ்சி சங்கர மடத்தில் நுால் வெளியீடு

X
காஞ்சி காமகோடி பீடத்தின் சமய, சமுதாய, கலை, கலாசார பண்பாண்டு சேவை அமைப்பான, இந்து சமய மன்றம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், நேற்று, காலை 9:30 மணிக்கு மஹா சுவாமிகள் கலையரங்கில் காஞ்சி க்ஷேத்ர கலாமந்திர் குழுவினரின் காஞ்சிபுரம் பாணி நாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது.இதில், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமயப்பணிகள் என்ற தலைப்பில், சென்னை ஆய்வறிஞர் புலவர் வே.மகாதேவன், சமுதாயப்பணிகள் என்ற தலைப்பில், சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடசன் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர். மாலை 6:00 மணிக்கு, புலவர் வே.மகாதேவன் எழுதிய 'சேக்கிழார் சொன்னதும் சொல்லாததும், அகத்தியர் அகராதி' ஆகிய இரு நுால்களை காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெளியிட்டார். தொடர்ந்து, சமுதாய பணியாற்றி வரும் சேவை அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் விருது வழங்கினார். இதில், காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம், நவநீதகிருஷ்ணன் பஜனை சபா, ஆனந்த கிருஷ்ணன் பஜனை குழு, பசுமை இந்தியா அறக்கட்டளை, காஞ்சி அன்னசத்திரம். சர்வம் அறக்கட்டளை, விழுதுகள் அமைப்பு, யங் இந்தியா, காஞ்சி நகர வரவேற்பு குழு, காஞ்சி சங்கரமடம் வரவேற்பு குழு உள்ளிட்ட அமைப்புகளுக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், 'இருள் நீக்கி' விருது வழங்கினார்.தொடர்ந்து கிருஷ்ணா கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், பூனைத்தாங்கல் நல்லாசிரியர் சந்திரசேகர், இயற்கை விவசாயி கீழம்பி எழிலன், ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மைய வளவன் அண்ணாதுரை, தொல்லியல் வீரராகவன். மங்கையர்கரசி தம்பதியர், காஞ்சிபுரம் பாணி நாட்டிய மரபை காத்து, பயிற்றுவிக்கும் உடுப்பி மதுமதி பிரகாஷ், அனாதை சடலங்களுக்கு ஈமச்சடங்கு செய்து வரும் சீனிவாசன். சங்கரா கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், 'சேவை செம்மல் என்ற விருது வழங்கி, ஆசியுரை வழங்கினார். ஜயேந்திரரின் வார்ஷிக ஆராதனை மஹோத்சவ தினமான, இன்று, காலை 7:00 மணிக்கு, ஸ்ரீருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. காலை 9:00 மணி முதல், பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடக்கின்றன. வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Next Story

