வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபர் கைது

X
Komarapalayam King 24x7 |15 March 2025 6:48 PM ISTகுமாரபாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபர் கைது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசு விவேகானந்தா கார்டன் பகுதியில் வசிப்பவர் எலும்பு முறிவு மருத்துவர் யுவராஜ், 42. இவரது மனைவி அமுதா, 37. தற்பொழுது மருத்துவ படிப்பு முடித்து மகப்பேறு மருத்துவ படிப்பினை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். பிப்.8ல் காலை 11:௦௦ மணியளவில் மருத்துவர் யுவராஜ் மற்றும் அவரது பெற்றோர்கள் ஈஸ்வரன், சித்தம்மாள் ஆகியோர், அமுதா மற்றும் அவரது ஆண் குழந்தையை பார்ப்பதற்காக கோவைக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து இரவு அங்கே தங்கி விட்டு, மறுநாள் மாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு வந்தனர் அப்பொழுது வீட்டின் கேட் பூட்டிய நிலையில், திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் மரக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக உள்ளே சென்று படுக்கை அறையில் இருந்த அலமாரியை பார்த்த பொழுது அது திறந்த நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் உள்ளதா? என சோதனை செய்தனர் ஆனால் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் ரொக்க தொகையும் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மருத்துவர் யுவராஜ் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் பேரில் விரைந்து வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்த பொழுது ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து போலீசார் மருத்துவர் யுவராஜ் வீட்டில் கொள்ளை போனது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை காவேரி நகர் புதிய பாலம் செல்லும் வழியில் குமாரபாளையம் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரணை செய்த போது, அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அருண்குமார், 32, என்பது தெரியவந்தது. வீ.மேட்டூர் டாக்டர் வீட்டில் நகை பணம் கொள்ளையடித்த நபர்களில் இவரும் ஒருவர் என்பது தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் கொள்ளையடித்த நகை பணம் குறித்து இவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
