வார சந்தை வளாகத்தில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

வார சந்தை வளாகத்தில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை
X
அச்சிறுபாக்கம் வார சந்தை வளாகத்தில், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின், புறவழிச் சாலையில் உள்ளது. அந்த காலி இடத்தில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடக்கிறது. அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை, இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளியூர் பகுதி வியாபாரிகளும், இங்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்கின்றனர்.. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், சிறிய அளவிலான கடைகளுக்கு, 25 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சில வியாபாரிகள், புறவழிச் சாலையை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம், பேரூராட்சி நிர்வாகம் கடைக்கு ஏற்றார் போல், கட்டணங்களை வசூல் செய்கிறது. சந்தை வளாகத்தில் இருந்த முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது, சந்தை வளாக பகுதியில் குப்பை கொட்டப்பட்டு உள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும், சந்தை வளாகத்தில் வெளிச்சமின்றி உள்ளதால், வியாபாரிகள் தாங்கள் கொண்டுவரும் சிறிய அளவிலான 'பேட்டரி'களை கொண்டு விளக்கு வெளிச்சத்தை பயன்படுத்தி, வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே, கோவில் நிர்வாகத்தினர், சந்தை வளாகத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story