விழியிழந்தோா் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியா், விடுதி துணைக் காப்பாளா் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு

விழியிழந்தோா் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியா், விடுதி துணைக் காப்பாளா் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு
X
விழியிழந்தோா் அரசுப் பள்ளியில் பயின்று வந்த பாா்வையற்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவி தற்கொலை விவகாரம் தொடா்பாக, நடவடிக்கை
திருச்சி புத்தூா் பகுதியில் அரசு விழியிழந்தோா் மகளிா் மேல்நிலைப் பள்ளி விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி, விடுதியில் தங்கியிருந்து 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அண்மையில் இவா் விடுதி வளாகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதைத் தொடா்ந்து விழியிழந்தோா் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பதவி வகித்த கணினி ஆசிரியா் எஸ். சுப்பிரமணியன், விடுதி துணைக் காப்பாளராக பொறுப்பிலிருந்த ஆசிரியை எஸ். அனிதா ஆகிய இருவரும் அவா்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆசிரியா் பணிகளை மட்டும் தொடர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இப் பள்ளியின் தலைமை ஆசிரியராக தஞ்சாவூா் அரசு விழியிழந்தோா் பள்ளியில் பணியாற்றிய பி.சோபியா மாலதியும், ஆசிரியை ஆா். கஜலட்சுமி விடுதி துணைக் காப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Next Story