அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

X
கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி நாற்கர சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரையில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் அரசு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை டிரைவர் நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் ராஜாஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 10 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ராஜாபுதுக்குடி அருகே தனியார் நிறுவனம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் நாற்கர சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் டிரைவர், பயணிகளான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி லட்சுமணன் மகன் முத்துக்குமாரசாமி (வயது 55), மதுரை காமராஜர் சாலை ஜீவாஆனந்த் (74) உள்ளிட்ட 4பேர் படுகாயம் அடைந்தனர். கண்டக்டர் உள்ளிட்ட மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பஸ்சில் பலத்த காயங்களுடன் இருந்த பயணிகளை மீட்டு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சாலையோர பள்ளத்தில் உருகுலைந்து கிடந்த அந்த அரசு பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது.
Next Story

