சேலத்தில் பிறந்தநாளன்று இளம்பெண் மர்மமான முறையில் சாவு

சேலத்தில் பிறந்தநாளன்று இளம்பெண் மர்மமான முறையில் சாவு
X
போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கே.எம்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் கனிமொழி (வயது 21). இவருக்கும், கோபிசெட்டிப்பாளையம் படுகபாளையத்தை சேர்ந்த மனோஜ்பிரபு (32) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் கனிமொழி வேலை செய்து வந்தார். இதனிடையே, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்த கனிமொழி, அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கனிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு கனிமொழி சென்று அங்கு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதன்பிறகு மாலை வீட்டிற்கு வந்து படுத்தார். பின்னர் இரவு 9 மணியளவில் சாப்பிடுவதற்காக அவரை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் அங்குள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்ெதாடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், கனிமொழி எப்படி இறந்தார்? என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதனால் அவரது சாவில் மர்மம் நீடிக்கிறது.குடும்ப பிரச்சினை காரணமாக அவர் விஷம் குடித்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கனிமொழிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story