ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது : பைக் பறிமுதல்!!

X
நாசரேத்தில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஸ்டேபிளி தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பேரூராட்சி கவுன்சிலர். இவரது மகள் பெர்சியா நாலுமாவடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயற்சி செய்தான். உடனே அந்த ஆசிரியை அவனிடம் போராடினார். ஆசிரியை சத்தம் போடவே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து பைக்கில் வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்று விட்டான். இதுகுறித்து பெர்சியா நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் நேற்று மாலை நாசரேத் பகுதிகளில் இன்ஸ்பெக்டர் கங்கைய நாத பாண்டியன் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஐசக் மகாராஜா மற்றும் காவலர் ஜெகநாதன் போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பைக்கை ஓட்டி வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் அவர் அணியாபரநல்லூர் வேத கோயில் தெருவைச் சேர்ந்த ராஜபால் மகன் அசோக் (37) என்பதும் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நாசரேத் போலீசார் அவரை கைது செய்து, அவர் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

