தோட்டிகோட்டில் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

X
குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. முடங்கி கிடந்த இந்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. நாகர்கோவில் – பெருங்குடி (காவல்கிணறு) நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து, தற்போது வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. காரோடு – வில்லுக்குறி, வில்லுக்குறி – நாகர்கோவில், நாகர்கோவில் – கன்னியாகுமரி இடையிலான பணிகள் இன்னும் முடிவடையாமல் நடந்து வருகின்றன. கிடப்பில் உள்ள நான்கு வழிச்சாலையில் 28 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள் உள்பட சுமார் 60 பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் கன்னியாகுமரி – காரோடு வரையிலான நான்கு வழிச்சாலையில், புத்தேரி பெரிய குளத்தின் மேல் அமைய உள்ள பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பால பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இதேபோல் தோட்டிகோடு சந்திப்பிலும் நான்கு வழிச்சாலைக்கான பாலம் அமைக்கப்படுகிறது. 3 பிரிவுகளாக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்துக்கான கான்கிரீட் கூடுவைகள் (பாக்ஸ் வடிவமைப்பு கொண்டது) நேற்று வந்திறங்கின. ஜூன் மாதத்துக்கு பின் மழை தொடங்கி விடும் என்பதால், ஏப்ரல், மே மாதங்களுக்குள் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Next Story

