உத்திரமேரூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னலாம்படி, அமராவதிபட்டினம், குண்ணவாக்கம், காட்டாங்குளம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டு நவரை நெல்பயிர் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அதனால் அப்பகுதி விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலேஸ்வரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி திமுக சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி. குமார் தலைமையிலும், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலையில், நடைபெற்றது. இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்து கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story



