நீச்சல் குளத்தில் திருச்செந்தூர் தெய்வானை உற்சாக குளியல்!

X
கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் உற்சாகமாக நீராடியது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை கடந்த நவ. 18-ல் திடீரென பாகன் உள்பட 2 பேரை தாக்கியது. இதில் அவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, வனத்துறை, கால்நடை துறை மற்றும் பாகன்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பிய யானை, கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. கோயில் வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன் வழக்கமான உணவை உட்கொண்டு வருகிறது. யானை குடிலில் உள்ள ஷவர் மற்றும் குழாய் மூலம் குளிப்பாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் யானை தெய்வானை சரவணப் பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க இறக்கிவிடப்படுகிறது. சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளத்தில் இறங்கிய யானை உற்சாக மிகுதியில் துதிக்கையால் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்தும், நீந்தியும் தண்ணீரில் உருண்டு, புரண்டும் உற்சாகமாக விளையாடி வருகிறது.
Next Story

