இளைஞர் தலையில் வெட்டி கொலை: மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை
பொன்னேரி அருகே இளைஞர் தலையில் வெட்டி கொலை. மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை. கொலைக்கான முன் விரோதம் குறித்து தனிப்படைகள் தேடுதல் வேட்டை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (30). சங்கருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தாய், தந்தையுடன் வசித்து வந்தார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிஃப்ட் மெக்கானிக்காக சங்கர் பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து சங்கர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை ஏரிக்கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர்கள் சங்கர் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதேனும் தகராறா, பெண் விவகாரத்தில் காதல் தகராறில் ஏதேனும் சிக்கினாரா, சங்கர் கொலைக்கான முன்பகை என்ன என்பது குறித்து காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற இளைஞர் மறுநாள் காலை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story








