நடிகர் விக்ரமுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.
நடிகர் விக்ரமுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள். கரூரில் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" திரைப்படம் 5 நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த திரையரங்கத்திற்கு நேற்று இரவு 7.30 மணிக்கு நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் திரைப்படத்தை காண காரில் வந்தார். திரையரங்கிற்கு முன்பு கூடி இருந்த ஏராளமான ரசிகர்கள் விக்ரமை வெளியே வாருங்கள் என கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து வெளியே வந்த விக்ரம் அருகில் உள்ள தங்கும் விடுதியின் கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏணி போட்டு ஏறி ரசிகர்களிடம் சாமி திரைப்படத்தில் வரும் ஆறுச்சாமி வசனத்தை பேசி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ரசிகர் ஒருவரின் செல்போன் மூலம் செல்பி வீடியோ எடுத்துக் கொண்ட அவர் ஏணிப் படியில் கீழே இறங்கி திரையரங்கத்திற்குள் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கூட்டம் அதிகமானதால் போலீசார் வாகனத்தில் ஏற்றி அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக திரையரங்கிற்குள் காத்திருந்த ரசிகர்கள் படத்தை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story





