தொகுப்பு வீடுகளை கட்டிதர கோரி பழங்குடியினர் மறியல்

தொகுப்பு வீடுகளை கட்டிதர கோரி பழங்குடியினர் மறியல்
X
ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள, 74 பழங்குடியினருக்கு, மத்திய அரசின் பிரதமர் ஜென்மன் திட்டத்தின் கீழ், 5 லட்சத்து 7,000 ரூபாய் மதிப்பில் தொகுப்பு வீடுகள் ஒதுக்கிடு செய்யப்பட்டு உள்ளது. அதன் படி, மதுரமங்கலம் அருகே, செல்லம்பட்டிடை ஊராட்சியில், எலுமியான்கோட்டூர் கிராமத்தில் 41 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் 33 தொகுப்பு வீடுகள் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடுகளின் பயனாளிகளுடனான ஆலோசனை கூட்டம், ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் ஆர்த்தி தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தொகுப்பு வீடுகளின் பயனாளிகளின் வங்கி கணக்கில், வீட்டிற்காக தொகை 5 லட்சத்து 7,000 ரூபாய் வரவு வைக்கப்படும். அதன்படி, பயனாளிகளே வீட்டினை கட்டிக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30க்கும் மேற்பட்ட பயங்குடியினர், தொகுப்பு வீடுகளை அரசே ஒப்பந்ததாரர்கள் வாயிலாக கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story