அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

X

திருச்செந்தூர் அருகேயுள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள அம்மன்புரம் மேல புதுக்குடி கிராம எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டஅருள்மிகு அருஞ்சுனைகாத்த அய்யனார் திருக்கோவிலில் ஆண்டு தூரம் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் மகா கணபதி ஹோமம், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றமும் நடந்தது. பின்னர் தீபாரனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் கோவிலில் தங்கி பத்து நாட்கள் விரதம் இருப்பவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.இதில் மேல புதுக்குடி, திருச்செந்தூர், குரும்பூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், 6வது நாள் நிகழ்ச்சியாக 7ம் தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு விசேஷ அலங்கார தீபாரணையும் அதைத் தொடர்ந்து மகா அன்னதானமும் நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவான 10ம் நாள் 11ம் தேதி வெள்ளிக்கிழமை காலை7.30 மணிக்கு மகா கணபதி ஹோமம் சாஸ்தா மூல மந்திர ஹோமம் பூர்ணாதி தீப ஆராதனையும் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் மதியம் 2 மணிக்கு மேல் அருஞ்சுனை காத்த அய்யனாருக்கு உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு மேல் புஷ்ப அலங்காரத்தில் அய்யனாருக்கு மகா சிறப்பு அலங்கார தீபஆராதனை ஆகி இரவு ஒரு மணிக்கு உற்சவ அய்யனார் கற்பக சப்பரத்தில் எழுந்தருளி மேல புதுக்குடி கிராம வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி சிவகாசி விருதுநகர் சாத்தூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபடுவார்கள். திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி பட்டிமன்றம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரகுருபரன், வினோபால், அசோக் ராஜ், ராமநாதன், சரவணன், ராமகிருஷ்ண முத்து, சுந்தரபாண்டியன், சுப்பிரமணியன் உள்பட கோவில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர்.
Next Story