நாகையில் தாய்க்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய

நாகையில் தாய்க்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய
X
மகளை தேர்வுத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு
தமிழகம் முழுவதும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தவிர, தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி வருகின்றனர். நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைபள்ளியில், நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதும் நபர்களிடம் கொடுத்து விட்டு கையப்பம் பெற்றார். அப்போது, அங்கு தேர்வு எழுதிய ஒரு மாணவி முகக்கவசம் அணிந்து இருந்தார். இதனால், சந்தேகமடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், முகக்கவசத்தை அகற்றும்படி கூறினார். நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் மாணவியின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபர் புகைப்படம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தனித்தேர்வு) முத்துச்சாமி ஆகியோர், தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் வருகை தந்தனர். தொடர்ந்து, அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், நாகை வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த செல்வாம்பிகை என்பது தெரியவந்தது. இவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. கடந்த 28-ம் தேதி நடந்த தமிழ் பாடத் தேர்வை, இதே போல் முகக்கவசம் அணிந்து செல்வாம்பிகை தேர்வு எழுதியது தெரியவந்தது. இது குறித்து, வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, செல்வாம்பிகையை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தாய் சுகந்தி பத்தாம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்தபோது, மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார் என விசாரணை செய்து வருகின்றனர். நாகப்பட்டினத்தில் நடந்த ஆள்மாறட்டம் குறித்த தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக சென்னைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Next Story