தஞ்சாவூரில் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி

தஞ்சாவூரில் புகழ்பெற்ற பச்சைக்காளி, பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. தஞ்சாவூர் கரந்தையை அடுத்துள்ள சுங்கான் திடல் கோடியம்மன் கோயிலில் உற்சவர்களான பச்சைக்காளி, பவளக்காளி கற்சிலைகள் அபூர்வமான கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், அரண்மனை வளாகத்திலிருந்து பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மேல ராஜ வீதியில் சங்கரநாராயணன் கோயிலுக்கும், கொங்கணேஸ்வரர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் புதன்கிழமை இரவு பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஏப்.4) பச்சைக்காளி, பவளக்காளி ஐம்பொன் திருமேனிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வருதல், களிமேட்டுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி, இரவு களிமேட்டில் வழிபாடுகள் முடித்துக் கொண்டு, 5 ஆம் தேதி காலை கோடியம்மன் கோயிலை வந்தடைதல், 6 ஆம் தேதி காப்பு அவிழ்ப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
Next Story

