ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்க இரவு காவலர்களை பணி அமர்த்த வேண்டும்

செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின், முதலாவது மாவட்ட மாநாடு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சி.சத்யா வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் சி.வினோதா நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். அறிக்கைகள் ஒருமனதாக ஏற்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற, நிர்வாகிகள் தேர்வில் சொ.ஜெயபாரதி, மாவட்டத் தலைவராகவும், சே.லதா, பியூலா, கனகா ஆகியோர் மாவட்ட துணைத் தலைவர்களாகவும், கா.ராம்குமார், மாவட்டச் செயலாளராகவும், வினேதிதா, வினோதினி, சுஜி ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும், கலைச்செல்வி மாவட்டப் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம்.மூர்த்தி, வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் த.ஸ்ரீதர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்க தலைவர் கே.ரவிச்சந்திரன், அரசு நர்சுகள் சங்கத் தலைவர் ப.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் சிறப்புரையாற்றினார். சங்க மாநிலத் துணைத் தலைவர் ர.ராகவன் நிறைவாக பேசினார். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் நீதியரசர்கள் குழு அறிக்கை அடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்க இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், புதிய மாவட்டத் தலைவர் சொ.ஜெயபாரதி நன்றி கூறினார்.
Next Story