பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

X
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான பங்குனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் இத்திருவிழா, இன்று தொடங்கி வரும் 15-ம் தேதிவரை தொடர்ந்து 11 நாள்கள் நடக்கிறது.இவ்விழா நாள்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான வரும் 13-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான வரும் 14-ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. 11-ம் திருநாளான 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
Next Story

