திருமருகல் ஒன்றியத்தில் உளுந்து பயறு அறுவடை பணி தீவிரம் - மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், சியாத்தமங்கை, திருப்பயத்தங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ஏனங்குடி, திருப்புகலூர், குத்தாலம், நரிமணம், மருங்கூர், நெய்குப்பை உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 25 ஆயிரம் ஏக்கரில், உளுந்து மற்றும் பயறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது உளுந்து பயிர் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தபோது, வயலில் சரியான ஈரப்பதம் வைத்து உளுந்து மற்றும் பயறு விதைப்பு செய்தோம். மேலும், தரிசாக கிடந்த ஆயிரம் ஏக்கர் பரப்பில் புழுதி உழவு செய்து, உளுந்து, பயிறு பயிர்களை சாகுபடி செய்தோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம். ஆனால், பயிர்கள் நன்றாக வளர்ந்த நேரத்தில் பருவம் தவறி கனமழை பெய்து, வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியும், வேர் அழுகியும் சேதமடைந்தது. மேலும், கொடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால் உளுந்து மற்றும் பயறு காய்கள் காய்ப்பது குறைந்து விட்டது. மேலும், முற்றிய உளுந்து மற்றும் பயறு காய்களை எலிகள் சேதம் ஏற்படுத்தி விட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 குவிண்டால் உளுந்து கிடைக்க வேண்டிய நிலையில், ஒரு குவிண்டால் கிடைப்பதே அரிதாகி விட்டது. தற்போது, குறைந்த அளவு மகசூல் கிடைத்துள்ளதால் அறுவடை கூலிக்கு கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பயறு செடிகள் நன்கு உலர்ந்த பிறகு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் மட்டுமே, தற்போது வெறும் செடிகளை மட்டும் அறுவடை செய்து வருகிறோம். திருமருகல் பகுதியில், உளுந்து, பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

