திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் ஐராவதிஸ்வரர் கோவில் குடமுழுக்கு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஐராவதிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடந்து 185 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அக்கிராமத்தினர், மருளாளிகள் உள்ளிட்டோர் முடிவு செய்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிந்து, நேற்று மகா குடமுழுக்கு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த மாதம் 24 -ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம், 28 -ம் தேதி ரக்ஷாபந்தனம், கடந்த 4-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 5-ம் தேதி புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்தல், முளைப்பாரி வரிசை எடுத்தல் தொடர்ந்து பூர்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்றது. 6-ம் தேதி யாக பூஜைகள், மகா தீபாரதனையும் நடைபெற்றது. நேற்று அதிகாலை யாக சாலை பூஜைகள், மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கடங்கள் புறப்பட்டு, 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழாவில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Next Story



