ராமநாதபுரம் கோவில் திருவிழா நடைபெற்றது

கமுதியில் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி களிமண் மனிதர்கள் (சேத்தாண்டி) நகர்வலம் கமுதியில் வித்தியாசமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 2-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான இன்று அக்கினிச்சட்டி, தீக்குண்டம் இறங்குதல் நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சேத்தாண்டி பக்தர்கள் அதிகாலை முதல் களிமண் சேறு பூசி களிமண் மனிதர்களாகவே மாறி கமுதியை நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வெயிலின் தாக்கம் எப்போதும் அதிகமாக இருக்கும் உடல் சூடு மற்றும் தோல் வியாதிகளை குறைக்க அந்தக் காலத்திலேயே உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேத்தாண்டி திருவிழா என்பது காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 7 நாள் விரதம் இருந்த பக்தர்கள் கமுதி ஊரணியில் உள்ள களிமண் சேற்றைக் குழைத்து தலை முதல் கால் வரை அடையாளம் தெரியாத அளவிற்கு பூசி கமுதி முழுவதும் உள்ள கோவில்களுக்கு மேள தாளங்களோடு சென்று இறுதியில் முத்துமாரியம்மன் கோவில் சென்று வழிபட்டு செல்கின்றனர். களிமண் இயற்கையாகவே குளிர்ச்சியானது என்பதால் அதை உடலில் பூசினால் உடல் குளிர்ச்சி பெறும் என்பதால் கமுதி சுற்றுவட்டார பகுதி மக்கள் களிமண் சேறு பூசி ஒரு மணி நேரம் நகர்வலம் வருவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் முத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக சேத்தாண்டி வேஷம் போடத் தொடங்கினர். களிமண் குளிர்ச்சியானது என்பதால் கோடைகாலத்தில் வரும் வேர்க்குரு, வேனல்கட்டி, அம்மை போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்கவும்,களி மண்ணுக்கு இயற்கையாகவே நீரை உறிஞ்சும் குணம் இருப்பதால் உடலில் பூசும்போது வியர்வை வரும் வியர்வை கண் அடைப்புகள் நீங்கி வியர்வை வெளியேறுவதால் உடல் குளிர்ச்சியாகும். இந்த ஆண்டு கமுதி மற்றும் வெளியூர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேத்தாண்டி வேடம் இட்டு கமுதி முழுவதும் களிமண் மனிதர்களாகவே காட்சியளித்தனர்.
Next Story