அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
Komarapalayam King 24x7 |14 April 2025 8:57 PM ISTகுமாரபாளையத்தில் அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. கோடையின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் பொதுமக்கள் செல்லும் போது, தாகம் ஏற்பட்டால் தாகம் தணிக்க ஏதுவாக, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் நீர் மோர் பந்தல் அமைத்து வருகின்றனர். இந்நிலையில் குமாரபாளையம் நகர அ.தி.மு.க சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி நடந்தது. நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, முலாம்பழம், இளநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story


