மதுப்பாட்டில்கள் சாலையில் போட்டு உடைப்பு

மதுப்பாட்டில்கள் சாலையில் போட்டு உடைப்பு
X
வத்தலகுண்டு அருகே கோம்பைப்பட்டியில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை. காவல்துறை கண்டுகொள்ளாததால், பொது மக்களே மதுப்பாட்டுகளை பறிமுதல் செய்து, சாலையில் உடைத்தனர். பரபரப்பு வீடியோ வைரல்
வத்தலகுண்டு அருகே சட்ட விரோதமாக, கோம்பைப்பட்டி பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதை, காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், ஆத்திரமடைந்த பொது மக்களே மதுப்பாட்டுகளை பறிமுதல் செய்து, சாலையில் உடைத்தனர். தற்போது சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, கோம்பைபட்டி உள்ளது. விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதி, குளிப்பட்டி செல்லும் சாலையில், தனியார் ஒருவர் காவல்துறையின் துணையுடன், அரசு அனுமதி இல்லாமல், 24 மணி நேரமும், கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை நடத்தி வந்துள்ளார். இதனால், இந்தப் பகுதியில் உள்ள கோம்பைபட்டி, குளிப்பட்டி, சிவஞானபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், இங்கு மது வாங்கி குடித்து வந்துள்ளனர். மேலும், இந்த வழியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அச்சத்துடன் சென்று வந்துள்ளனர். பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மது வாங்கி அருந்தும் அவல நிலை குறித்து, சம்பந்தப்பட்ட வத்தலகுண்டு காவல் நிலையத்தில் கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்று, சாக்கு பையில் வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஆவேசமாக சாலையில் போட்டு உடைத்தனர். மேலும், அந்த சாலையில் மரங்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற வத்தலகுண்டு காவல்துறையினரிடம் கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தற்போது வரை போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத நிலையில், கள்ளத்தனமாக விற்பனை செய்த மது பாட்டில்களை பெண்கள் பறிமுதல் செய்து சாலையில் உடைத்த சம்பவ வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story