கோவை: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு த.வெ.க உதவி
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்நிகழ்வில் ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கியமாக, சூலூர் சிந்தாமணி புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் மூன்று வயது குழந்தை, முதுகெலும்பு சிதைவு (Spinal Muscular Atrophy - SMA) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி மருந்து தேவைப்படும் நிலையில் உள்ளது. இந்த குழந்தையின் மருத்துவ செலவிற்காக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உடனடி நிதியுதவி வழங்கப்பட்டது.
Next Story



