இரவு நேரங்களில் தொடர்ந்து திருடி வரும் மர்ம கும்பல்

X
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அழகம்பட்டி, காமலாபுரம் பகுதிகளில் ஆடு, கோழி மற்றும் மின்மோட்டார்களை இரவு நேரங்களில் தொடர்ந்து திருடி வரும் மர்ம கும்பல். சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே, அழகம்பட்டி பகுதியில் அதிகளவில் விவசாயிகள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கார்த்திக் (30) என்பவருடைய வெள்ளாடு இரண்டு மற்றும் கருணாமூர்த்தி (22) என்பவருக்கு சொந்தமான இரண்டு வெள்ளாடுகளை இரவு நேரங்களில் திருடி சென்று விட்டனர். ஏற்கனவே, இந்த பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆடு, மாடு கோழி மற்றும் தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்களை திருடி வருகின்றனர். இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான வெள்ளாடுகள் காணவில்லை என, சிசிடிவி காட்சிகளை வைத்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கார்த்திக் என்பவர் புகார் அளித்தார். ஆனால், இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட கார்த்திக் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளார். ஆடுகள் காணாமல் போன நிலையில் அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்திற்கு கடந்த மூன்று வாரங்களாக தினமும் கார்த்திக் மற்றும் விவசாயிகள் அலைந்து வருகின்றனர். ஆனால், காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை. எனவே தமிழ்நாடு அரசு ஆடுகள் திருடு போன சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடர்களை உடனடியாக கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

