நாய் கடித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாத தொழிலாளி பலி

X
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதியில் சேர்ந்த லட்சுமணன் மகன் அற்புதராஜ் 42 கூலி வேலைசெய்து வருகிறார். இவரை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்ததாகவும் தெரு நாய் கடிக்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். நாய் கடித்த இடத்திற்கு அப்போதைக்கு தன் வீட்டில் உள்ள ஏதோ ஒரு மருந்தை போட்டுக் கொண்டு வழக்கம் போல் அவர் பணியை பார்த்து வந்ததாகவும், தொடர்ந்து அவர் உடல் நலனில் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம் போலவே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென அற்புதராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் அற்புதராஜை சேவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் நாய் கடித்து இரண்டு மாதங்கள் சிகிச்சை பெறாமல் இருந்ததால் அற்புதராஜ் ன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அற்புதராஜ் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அற்புதராஜ் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் உரிய தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தெரு நாய் கடித்து அற்புதராஜ் உயிரிழந்த சம்பவம் சேவூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக நாய்க்கடி கடித்து முறையாக சிகிச்சை பெறாமல் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

