திருப்பத்தூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம்

X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருள்மிகு பூமாயி அம்மன் கோயில் 91 ஆம் ஆண்டு பூத்திருவிழாவை முன்னிட்டு 38 ஆம் ஆண்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் நடு மாடு, பூஞ்சிட்டு மாடு, பெரிய மாடு சின்ன மாடு என பல பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 8 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 14 ஜோடிகள் என மொத்தம் 22 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதே போன்று பெரியமாடு பிரிவில் 6 ஜோடிகளும், சின்ன மாடு பிரிவில் 20 ஜோடிகள் என மொத்தம் 26 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்த மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் நடுமாடுகளுக்கான எல்கையாக 7 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும், பெரிய மாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாடுகளுக்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று திரளான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர்.
Next Story

