சேலத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமையான கடந்த 18-ந் தேதி அரசு விடுமுறை என்பதால் அதற்கு பதிலாக நாளை (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story

