திருச்சிற்றம்பலத்தில் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம் பெண் சாலை மறியல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பொதுமக்களும் சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு
காதலனுடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள வலச்சேரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி நாகலிங்கம். மகன் பிரகாஷ் ( வயது 24) இவருக்கும் வலசக்காடு இடையர் தெரு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகள் ஹரிப்பிரியாவிற்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஹரிப்பிரியா தாய், தந்தையை இழந்து விட்டார். தனது உறவினர் ஒருவரது அரவணைப்பில் அவர் வாழ்ந்து வருகிறாள். இந்த நிலையில், ஹரிப்பிரியா கர்ப்பமானாள். இது குறித்து அறிந்த காதலன் பிரகாஷ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹரி பிரியா கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் பிரகாஷ் மீது புகார் கொடுத்தார். போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு, இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். ஆனால், ஹரிப்பிரியாவின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் பிரகாஷ் வாக்குவாதம் செய்தார். இந்த நிலையில் ஹரி பிரியாவிற்கு அகிலாண்டேஸ்வரி என்ற பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனை முடிவில் ஹரிப்பிரியாவின் கர்ப்பத்திற்கு பிரகாஷ் தான் காரணம் என்பது நிரூபணம் ஆனது. அதனைத் தொடர்ந்து பிரகாஷ் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இதன் விளைவாக பிரகாஷ் தலைமறைவாகிவிட்டார். தனக்கு நீதி வேண்டும் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மீண்டும் நாடினார் ஹரிப்பிரியா. மகளிர் காவல் நிலைய போலீசார் திருச்சிற்றம்பலம் போலீசாரின் உதவியுடன் பிரகாஷின் பெற்றோரை அழைத்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசினர். ஆனால் பிரகாஷ் எங்கு இருக்கிறான் என்று எங்களுக்கு தெரியாது. நீங்கள் அவன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு பிரகாஷின் பெற்றோர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில், பிரகாசின் சகோதரிக்கு திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வர் கோவிலில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தவிழா முடிந்தவுடன், திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு விழாவிற்கு வந்தவர்கள் உணவருந்த சென்றனர். இது குறித்து அறிந்த ஹரிப்பிரியா, கைக் குழந்தையுடன் சென்று உணவு விடுதிக்கு அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷின் கன்னத்தில் பளார் என அறைவிட்டு, தனக்கும் தனது குழந்தைக்கும் நியாயம் கேட்டு கதறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷின் உறவினர்கள் ஹரிப்ரியாவையும் அவரது குழந்தையையும் கடுமையாக தாக்கினர். ஹரிப்பிரியா கைக்குழந்தையுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சிற்றம்பலம் போலீசார் கைக்குழந்தையுடன் இளம்பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக சாலையில் அமர்ந்தனர். இதனால் பட்டுக்கோட்டை அறந்தாங்கி, புதுக்கோட்டை சாலையில் நேற்று இரவு சுமார் 1மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஹரிப்பிரியா மற்றும் அவரது காதலன் பிரகாஷ் அவரது பெற்றோர் ஆகியோரை திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் திருச்சிற்றம்பலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹரிப்பிரியாவின் பிரச்சனை நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டு இருப்பதால் அதன் முடிவுக்கு இருதரப்பினரும் காத்திருக்க வேண்டிய அவசியம் என்பதை இரண்டு தரப்பினருக்கும் புரிய வைத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், பிரகாஷின் நடவடிக்கைகளை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story



