ராமநாதபுரம் காற்றுடன் கூடிய மழை

X
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீரனூரில் விவசாயிகள் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை மரங்கள் நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீரனூரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கீரனுர் விவசாயிகள் கூறியதாவது: நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜனவரி மாதத்தில் வாழை நடவு செய்யப்பட்டு, விவசாயம் தொடங்கப்பட்டது. பூ பூத்து குழை உற்பத்தியாகும் தருவாயில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மைத்துறை, வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story

