உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய சிறுவன்

X
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனது உறவினர் ஒருவருடன் கடந்த மே 14ஆம் தேதி பிற்பகல் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது, தனியார் பேருந்து மோதியதில் சிறுவன் சபரீஷ் (11) தலைக்காயம் அடைந்தார். இதனையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பிறகு வேலம்மாள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தலைக்காய பிரிவில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (மே.16) காலை மருத்துவர்கள் மூளைச்சாவடைந்ததாக தெரிவித்தனர் . இந்நிலையில் சபரீஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்த நிலையில், அதற்காக அவரது தந்தை சரவணன் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரிக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிறுநீரகங்களும், கருவிழிகளும் தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்பு தானத்தால் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
Next Story

