சமையல் தொழிலாளி வசம் நகை பறிப்பு டி.எஸ்.பி. நேரில் விசாரணை

X
Komarapalayam King 24x7 |18 May 2025 7:35 PM ISTகுமாரபாளையத்தில் சமையல் தொழிலாளி வசம் நகை பறிப்பு சம்பவம் குறித்து டி.எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அய்யன் தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் மாதேஸ்வரன், 56. தனது வீட்டிலேயே உணவகம் நடத்தி வரும் மாதேஸ்வரன், உணவு தயாரிப்பதற்காக, சமையல் உதவியாளர் வேம்பு என்பவரை அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதிக்குச் சென்று வரும் பொழுது, குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் சமையல் உதவியாளரை, அதிகாலை 03:00 மணியளவில், தனது வாகனத்தில் அமர வைத்து அழைத்து வந்துள்ளார். அப்பொழுது இருள் சூழ்ந்த பகுதியில் வந்த ஒரு மர்ம நபர், மாதேஸ்வரனை தாக்கி கீழே தள்ளியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். அப்பொழுது தங்கச்சங்கிலியின் ஒரு பகுதியை மாதேஸ்வரன் பிடித்துக் கொண்டதால், தங்கச் சங்கிலியில் நான்கு பவுன் நகை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்த வேம்பு உடனடியாக சத்தமிடவே, பலத்த காயமடைந்த மாதேஸ்வரனை அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. கிருஷ்ணன் நேரில் வருகை தனது விசாரணை மேற்கொண்டார். டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உணவக உரிமையாளரை தாக்கி நான்கு பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
