கோவை: தாய் யானைக்கு கும்கி யானை உதவியுடன் சிகிச்சை !

X
கோடை வறட்சியால் உணவு, தண்ணீர் தேடி வெளியேறிய தாய் யானை ஒன்று கோவையில் மயங்கி விழுந்தது. குட்டி யானை பரிதவிப்புடன் தாயை எழுப்ப முயன்ற நெகிழ்ச்சியான காட்சி காண்போரை உலுக்கியது. மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக்கழக மேற்குப் பகுதியில் நேற்று தாய் யானையும் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்றதை அறிந்த வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாய் யானை உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்தது. சிறிது நேரத்தில் அசைவு தெரியவே, குட்டி யானை தனது சிறிய தும்பிக்கையால் தாயை எழுப்ப முயற்சித்தது. தாய் யானையின் மோசமான நிலையை அடுத்து, வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக மருத்துவர்கள் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். படுத்துக் கிடக்கும் யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிக்க கும்கி யானை துரியனின் உதவி நாடப்பட்டுள்ளது. இதனிடையே, சோமையம்பாளையம் அருகே உள்ள குப்பை கிடங்கின் கழிவுகளை உட்கொண்டதால் யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். தாய் யானை விரைவில் குணமடைய வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
Next Story

