நாமக்கல் நகைக்கடை உரிமையாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு!

நகைகளை விற்க வரும்போது அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து, நகை விற்க வருபவரிடம் நகையுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உரிய இரசீது வழங்க வேண்டும். என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அட்வைஸ்!
நாமக்கல் மாநகராட்சியில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சந்தேகப்படும்படியான பழைய நகைகளை வாங்க வேண்டாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். நாமக்கல் காவல் நிலையத்தில் மாநகர நகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜேஸ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.நாமக்கல் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி முன்னிலை வகித்தார். இதில் தங்கநகை கடை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளுடன் செயல்பட்டு,
திருட்டு நகைகள் வாங்க கூடாது என்றும், பழைய குற்றவாளிகள் கடைக்குள் நகை விற்க வரும்போது அவர்களின் முகங்களை கண்டறியும் சாதனம் போன்றவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், பேசிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ..தமிழகத்தில் தங்க நகைகளுக்காக நடைபெற்ற ஆதாய கொள்ளை- கொலை சம்பவங்கள் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துணையாக இருந்த நகை தொழிலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை யாரேனும், தங்க நகை கடைகள் மற்றும் வியாபாரிகளிடம் விற்பனைக்காக கொண்டு வந்தால் அவற்றை வாங்க வேண்டாம். உடனடியாக அதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
யாராக இருந்தாலும் நகைகளை விற்க வரும்போது அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து, நகை விற்க வருபவரிடம் நகையுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உரிய இரசீது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 3,500 வீடுகள் தனியாக சாலையோரம் விவசாய பண்ணையுடன் இணைந்து உள்ளன. அந்த வீடுகளை காவல்துறையினர் இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற தனியாக, விவசாய/ பண்ணை வீடுகளில் வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். குற்றங்களை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில்,காவல் உதவி ஆய்வாளர் சாந்தகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கருமலை ,செயலாளர் சிவ.சிதம்பரம்,பொருளாளர் கிரிதரன் மற்றும் நாமக்கல் மாநகர நகை வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
Next Story