கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்களை

ரூ.2.50 லட்சம் பொருட்களை பறித்துக் கொண்டு விரட்டி அடித்த இலங்கை கடற்படை
நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 20-ம் தேதி சண்முகம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். மேலும், 700 கிலோ மீன்பிடி வலை, 1 ஜிபிஎஸ், ஒரு செல்போன், ஸ்டவ், டார்ச் லைட் டீசல் உள்ளிட்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான  பொருட்களை பறித்துக் கொண்டு செருதூர் மீனவர்களை விரட்டியடித்தனர். பொருட்களை பறி கொடுத்த செருதூர் மீனவர்கள் சண்முகம், சக்திமயில், ஜெயராமன் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன் ஆகியோர், டீசலின்றி நடுக்கடலில் தவித்து கொண்டிருந்தனர். அப்போது, அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்களிடம் டீசல் பெற்றுக் கொண்டு செருதூர் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பினர். செருதூர் மீனவர்களிடம் ரூ.2.50 லட்சம் பொருட்களை பறித்துக் கொண்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story