திருவட்டார் : முன்னாள் ராணுவ வீரர் மாயம்

X
குமரி மாவட்டம் செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தற்போது வீட்டில் இருந்தவாறு சொந்த தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் சமீப காலமாக வெளியூருக்கு சென்று தங்கி இருந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியூருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் இன்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. ராதாகிருஷ்ணன் எங்கு சென்றார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இதனால் அவரது மனைவி இது குறித்து திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
Next Story

