ராமநாதபுரம் ஏர்வாடி சந்தனக்கூடு விழா நடைபெற்றது

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஆயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வரவேற்பு நேற்று அதிகாலை நடந்தது மே28-ந் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் 851ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர் என்பது நமது மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதே போல் இந்து சமூக மக்கள் முளைப்பாரி திருவிழா காலங்களில் பாரிகளை கடலில் கரைக்கச் செல்வதற்கு முன்னதாக பாதுஷா நாயகம் தர்கா வளாகத்தை மூன்று முறை வலம் வந்து அடக்க ஸ்தலத்தின் எதிரே வெளிப்பகுதியில் பாரிகளை இறக்கி வைத்து மரியாதை செலுத்தி எடுத்துச் செல்வது பல தலைமுறையாக தொடர்ந்து வருகிறது. ஏர்வாடி தர்கா மத நல்லிணக்கத்தின் மறு பெயராக திகழ்கிறது என்றால் மிகையாகாது. ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் ஜாதிகள் இல்லை. மதங்கள் இல்லை. மொழிகள் இல்லை. இனங்கள் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து இந்திய ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும் முன்னிலை வகிக்கிறது. சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலை நடைபெற்ற மதநல்லிணக்க சந்தனக் கூடு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 851ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஏப் 29-ந்தேதி மாலை 6:30 மணிக்கு தொங்கியது. மே-8ந்தேதிஅடிமரம் ஊன்றப்பட்டது. மே 9ந் தேதி மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றமும் நடந்தது. நேற்று அதிகாலை 4:00மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதாயத்தினரும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக்கூடுவிற்கு மலர் தூவி வரவேற்றனர். தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். மே 28-ந்தேதி அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகம்மது பாக்கிர் சுல்தான் லெவ்வை, செயலர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா , ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம், சோட்டை செய்யது அபுபக்கர் பாதுஷா, சோட்டை, ஹாஜி செய்யது ஹூசைன் , செய்யது இஸ்ஹாக் , அபுல் ஹசன் , முர்சல் இப்ராஹிம் ஆலீம், அமீர் ஹம்சா , சுல்தான் செய்யது இப்ராஹிம் , அப்துல்கனி , கலீல் ரஹ்மான் , செய்யது இப்ராஹிம் , அமின் , சித்திக் லெவ்வை, அப்துல் ரஹிம் அம்ஜத் ஹுஸைன் , லெவ்வைக்கனி , செய்யது அபுதாஹிர் ஆலிம் , செய்யது இஸ்காக் மற்றும் தர்கா ஹக்தார்கள் செய்திருந்தனர்
Next Story