கோவை: திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் பலி !

X
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு அருகே நடந்த சாலை விபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப்பிரியா (28) உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த திவ்யப்பிரியா, தனது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) ஆகியோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். நேற்று மாலை மதுரைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். கல்லாறு முதல் வளைவு அருகே வந்தபோது, கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் திவ்யப்பிரியா மற்றும் பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வளர்மதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திவ்யப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். பரமேஸ்வரி மற்றும் வளர்மதி இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

